rte.tnschools.gov.in : கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், 2022-2023 ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அனைத்து சிருபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, www.rtetnschools.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பத்தை ஏப்ரல் மாதம் 20 முதல் மே மாதம் 18ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம்.
கட்டாய கல்வி உரிமைச் சட்டம்:
இந்திய அரசு ஆறு முதல் பதினான்கு வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவசக் கட்டாயக் கல்வி வழங்க 'குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009' ஐ இயற்றியது. இச்சட்டம் ஏப்ரல் 1, 2010 முதல் அமுலுக்கு வந்துள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 86 ஆவது சட்டத்திருத்தின் அடிப்படையில் சட்ட விதி 21-அ அடிப்படையில் இச்சட்டம் நடைமுறைக்கு வந்தது. சட்டவிதி 21– 'அ' வில் 'அரசு 6 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, இலவச மற்றும் கட்டாய கல்வி வழங்கும் எனக் கூறுகிறது. இச்சட்டத்தை தமிழக அரசு அரசிதழில் 24, பிப்ரவரி, 2010 அன்று வெளியிட்டது. தமிழக குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை விதிமுறைகள் 2011, உருவாக்கி 08.11.2011 அன்று அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டது.
மாநில கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை ச் சட்டத்தை அமல்படுத்தும் மைய முனையமாகச் செயல்படும் என அரசு அறிவித்துள்ளது. குழந்தைகளுக்கான இலவச மற்றும் சுட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் சார்பான செயல்பாடுகளைக் கண்காணிக்கும் மைய முகமை அலுவலராக மாநில கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தில் பணிபுரியும் இணை இயக்குநர் (திட்டம்) நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொதுமக்கள் தொடர்பு கொள்ள ஏதுவாக மாநில கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட அமலாக்கப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக தனியாக தொலைபேசி (044-28278742. 28211391) இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.