மட்டன் சுக்கா இப்படி கார சாரமா செய்து பாருங்கள் சுவை அள்ளும்!


மட்டன் சுக்கா உணவகங்களில் மட்டும் எப்படி அவ்வளவு சுவையாக வருகிறது என்று நம்மில் பலருக்கு கேள்விகள் எழுவதுண்டு. அதை விடவும் மிகவும் சுவையான மட்டன் சுக்காவை வீட்டிலேயே செய்யலாம் வாருங்கள். 


தேவையான பொருள்கள்: 

  • மட்டன்- அரை கிலோ 
  • சின்ன வெங்காயம்- பத்து 
  • காய்ந்த மிளகாய்- நான்கு 
  • இஞ்சி பூண்டு விழுது- இரண்டு தேக்கரண்டி 
  • மிளகு – ஒரு தேக்கரண்டி 
  • சீரகம் – ஒரு தேக்கரண்டி 
  • தனியா – இரண்டு தேக்கரண்டி 
  • பச்சை மிளகாய்- இரண்டு 
  • மஞ்சள்தூள்- கால் தேக்கரண்டி 
  • பட்டை, லவங்கம்- இரண்டிரண்டு 
  • கருவேப்பிலை, மல்லித் தழை- ஒரு கொத்து 
  • உப்பு, எண்ணெய், தண்ணீர்- தேவையான அளவு 

செய்முறை:

  • ஒரு குக்கரில் எண்ணெய் சிறிதளவு விட்டு அதில், கால் தேக்கரண்டி மஞ்சள் சேர்த்து நன்கு சுத்தப்படுத்திய மட்டனை அதில் சேர்க்க வேண்டும். பிறகு அரை கப் அளவு தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். 
  • இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் கழித்து உப்பு தேவையான அளவு சேர்த்து குக்கரை மூடி மூன்று விசில் வைக்க வேண்டும். தண்ணீர் அதிகம் சேர்க்க வேண்டாம். கறியில் இருந்த தண்ணீர் தானாக வெளிவரும்.
  • இந்த சமயத்தில் சுக்காவிற்கு தேவையான மசாலாவைத் தயாரித்துக் கொள்ள வேண்டும். 
  • முதலில் ஒரு மிக்ஸியில் அல்லது அம்மியில் பொடியாக நறுக்கிய வெங்காயம் காய்ந்த மிளகாய் இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு  சீரகம், மிளகு, தனியா, இரண்டு சிறிய பட்டை மற்றும் லவங்கப்பூவைச் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 
  • பின்பு குக்கர் சத்தம் அடங்கிய பின்  திறந்து அதை ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும். 
  • ஒரு கடாயில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு, கருவேப்பிலை, வாலாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாயைச் சேர்த்து பிறகு இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். 
  • அடுத்து அரைத்து வைத்த வெங்காயம் மற்றும் காய்ந்த மிளகாய் விழுதை சேர்த்து நன்கு வதக்க வேண்டும் சிறிது நிறம் மாறியதும் அதனுடன் தனியாக அரைத்த கரமசாலாவைச் சேர்க்க வேண்டும். 
  • சிறிது பச்சை வாசனை சென்றதும், வேக வைத்த மட்டனை அதில் சேர்த்து நன்கு மசாலா படும் படி வதக்க வேண்டும். 
  • பிறகு குறைந்த தீயில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை மூடிப் போட்டு அவ்வப்போது திறந்து கிளறிவிட வேண்டும். காரணம் மட்டனில் தண்ணீர் இருக்கும். அது வற்றியதும் மல்லித்தழை தூவி இறக்கினால் சூடான கார சாரமான மட்டன் சுக்கா தயார். 

சாதம் வடித்து அதோடு இந்த மட்டன் சுக்காவை பிசைந்து சாப்பிட்டு பாருங்கள் அவ்வளவு தான்! 

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை