என்னதான் பல விதமான உணவு வகைகளை வீட்டில் சமைத்துக் கொடுத்தாலும் சில வகை உணவுப் பொருட்களையும், இனிப்பு வகைகளையும் கடைகளுக்குச் சென்று தான் வாங்க வேண்டிய அவசியம் இருக்கிறது. ஏனென்றால் நினைத்த உடனே சாப்பிடுவதற்கு சில இனிப்பு வகைகளை உடனடியாக வீட்டில் செய்ய முடியாது. ஆகவே ஆசைப்படும் பொழுது கடைக்கு சென்று வாங்கி சாப்பிடுகின்றனர். இதற்கு காரணம் இதனை வீட்டில் செய்வதற்கு தேவையான பொருட்களை வாங்க வேண்டும், நிறைய நேரம் செலவு செய்யவேண்டும் ஆனால் இப்படி ஆசைப்படும் நேரத்திலே சட்டென வீட்டிலேயே செய்யக் கூடிய இந்தப் பருப்பு போளியை நீங்களும் ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள். கடையில் விற்கும் அதே சுவையில் வீட்டிலேயும் தயார் செய்யலாம். இப்படி மட்டும் ஒரு முறை பருப்பு போளி செய்து உங்கள் குழந்தைகளுக்குக் கொடுத்துப் பாருங்கள். இனி கடையில் வாங்காமல் வீட்டிலேயே செய்து கொடுங்கள் என்று உங்களைத் தொல்லை செய்ய ஆரம்பித்து விடுவார்கள். வாருங்கள் இந்த சுவையான இன்ஸ்டன்ட் பருப்பு போளியை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்: கடலைப்பருப்பு – அரை கப், கோதுமை மாவு – ஒரு கப், வெல்லம் – ஒரு கப், தேங்காய் துருவல் – கால் கப், ஏலக்காய் – 2, நெய் – 6 ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்.
செய்முறை: முதலில் அரை கப் கடலைப்பருப்பு ஒரு கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் தண்ணீர் சேர்த்து 2 அல்லது 3 முறை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பிறகு மறுபடியும் இவற்றுடன் தேவையான அளவு சுடு தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும்.
பின்னர் ஊறிய கடலை பருப்புடன் இருக்கும் தண்ணீரை வடிகட்டி இவற்றை மிக்ஸியில் சேர்க்க வேண்டும். பிறகு இவற்றுடன் வெல்லத்தை பொடியாக நசுக்கி சேர்க்க வேண்டும். பின்னர் இரண்டு துண்டு ஏலக்காய் மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து அனைத்தையும் விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு இந்த விழுதை ஒரு கிண்ணத்தில் சேர்க்க வேண்டும். பின்னர் இதனுடன் ஒரு கப் கோதுமை மாவு சேர்த்துக் கலந்து விட வேண்டும். பிறகு இதனுடன் ஒரு கப் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு கால் கப் துருவிய தேங்காயையும் சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
ன்னர் இறுதியாக அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு ஒரு தோசைக்கல்லை அடுப்பின் மீது வைத்து அதில் லேசாக நெய் தடவி விட வேண்டும். பிறகு கரைத்து வைத்துள்ள மாவில் இருந்து ஒரு கரண்டி மாவை எடுத்து தோசை போன்று ஊற்ற வேண்டும். பிறகு இதன் மீது அரை ஸ்பூன் நெய் சேர்க்க வேண்டும். பின்னர் இதனை மூடி வைத்து 5 நிமிடம் கழித்து திருப்பி போட்டு வேக வைத்து எடுத்தால் சுவையான பருப்பு போளி தயாராகிவிடும்.