ரமலான் ஸ்பெஷல்; மட்டன் பிரியாணி செய்யலாம் வாங்க!

 


பாய் வீட்டு பிரியாணி என்றாலே தனி சுவைதான். அதிலும் பாய் வீட்டு மட்டன் பிரியாணியின் சுவையை எழுத்தில் அடக்க முடியாது.

மேற்படி கூறிய சிறப்புமிக்க அந்த மட்டன் பிரியாணியை ரமலான் தின சிறப்பாக எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாருங்கள்! 

தேவையான பொருள்கள்: 
  1. மட்டன்- 1 கிலோ 
  2. அரிசி- 3 டம்ளர் 
  3. வெங்காயம்- 400 கிராம் 
  4. தக்காளி- 400 கிராம் 
  5. பச்சைமிளகாய்- 5 
  6. மல்லித் தழை- ஒரு கைப்பிடி 
  7. புதினா- ஒரு கைப்பிடி
  8. இஞ்சி பூண்டு விழுது- 100 கிராம் 
  9. சிவப்பு மிளகாய்த்தூள்- 2 மேசைக்கரண்டி 
  10. பட்டை,லவங்கம், ஏலக்காய்- 4
  11. பிரியாணி இலை- 2 
  12. முந்திரி- 10 
  13. எலுமிச்சை பழம்- 1 
  14. தயிர்- ஒரு கப் 
  15. நெய்- 5 மேசைக்கரண்டி 
  16. உப்பு, எண்ணெய், தண்ணீர்- தேவையான அளவு 
செய்முறை: 
  • முதலில் மட்டனை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன், சிறிது மஞ்சள், ஒரு மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, அரை எலுமிச்சைப்பழத்தின் சாறு, ஒரு தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த்தூள் சேர்த்து மட்டனுடன் நன்றாக கலந்து, 10 முதல் 15 நிமிடம் வரை வைத்திருக்க வேண்டும். 
  • பின், ஒரு குக்கர் அல்லது பாத்திரத்தில், நெய் அல்லது எண்ணெய் ஊற்றி, பட்டை, லவங்கம், ஏலக்காய், இலை, போன்றவற்றை சேர்த்து சிறிது வதங்கியவுடன் வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். 
  • வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன், பச்சமிளகாய் மற்றும் தக்காளியை சேர்க்க வேண்டும். சிறிது வதங்கியதும் அதில், மல்லித்தழை, புதினா, இஞ்சி பூண்டு விழுதை சேர்க்க வேண்டும் பின்பு  உப்பு, சிவப்பு மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும். முந்திரியை தனியாக அரைத்து இதில் சேர்த்தால் சுவை இன்னும் கூடும். 
  • சிறிது நன்றாக வதங்கியதும், தயிர் சேர்த்து கட்டி இல்லமால் முழுவதுமாக கலந்துவிட வேண்டும். இரண்டு மூன்று நிமிடங்கள் கழித்து, மசாலாவால்  கலந்து வைத்த மட்டனை இதில் சேர்த்து, நன்கு கலந்துவிட வேண்டும். 5 முதல் 10 நிமிடங்கள் வரை இவ்வாறு செய்து கொண்டே இருத்தல் அவசியம். அப்போது தான் மசாலா நன்றாக மட்டனுடன் சேரும். 
  • (குக்கரில் வைத்திருந்தால் 3 டம்ளர் அரிசிக்கு ஆறு டம்ளர் தண்ணீர் தேவைப்படும். பாத்திரத்தில் வைத்திருந்தால் இரண்டு அல்லது மூன்று சொம்பு தண்ணீர் தேவைப்படும். மட்டன் மற்றும் காய்களில் இருந்த தண்ணீரும் வெளியேறும் என்பதால் அதற்கு ஏற்றாற்போல் தண்ணீரை கணக்கு செய்து வைத்தல் அவசியம்.) 
  • குக்கரில் வைத்தால் இரண்டு அல்லது மூன்று டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடி, இரண்டு அல்லது மூன்று விசில்கள் வைக்க வேண்டும். மட்டனை அதிக நேரம் மசாலாவுடன் கலந்து வேக வைத்ததால் மட்டன் முன்பே சிறிது வெந்திருக்கும். 
  • தனியாக ஒரு பாத்திரத்தில், 10 முதல் 15 நிமிடங்கள் முன்பு ஊறவைத்த அரிசியை, உலை வைத்து அதில் சேர்க்க வேண்டும். அரை வேக்காட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சிறிது உப்பு சேர்த்து வேக வைத்தால் நன்றாக இருக்கும். இருப்பினும் அது உங்கள் விருப்பம்.  
  • விசில் அடங்கியதும் தம் செய்யப் போகும் பாத்திரத்தில், அந்த சேர்வாவை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில், அரை எலுமிச்சைபழ சாற்றை பிழிந்து விட வேண்டும்.  
  • அரை வேக்காட்டு சோற்றை எடுத்து அதில் சேர்க்க வேண்டும். கலந்து விடமால் அப்படியே, 5 மேசைக்கரண்டி நெய் ஊற்றியதும் அரை கப் சோறு வடித்த நீரை அதில் ஊற்ற வேண்டும். தம் செய்ய கனமான பாத்திரத்தில் நீர் ஊற்றி, அதன் மேல் வைத்திட வேண்டும். முதல் இரண்டு மூன்று நிமிடங்கள், அதிக தீயிலும் பின்பு 10 நிமிடங்கள் குறைந்த தீயிலும் தம் செய்ய வேண்டும். 

பிறகு இறங்கியவுடன் முழுவதுமாக கலந்துவிட்டால் சுவையான ரமலான் மட்டன் பிரியாணி தயார்.  

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை