பா.ம.க. தலைமையிலான காவிரி உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் தமிழகம், புதுச்சேரியில் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. பா.ம.க. தொண்டர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக பல்வேறு இடங்களில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. திண்டிவனம் ரெயில் நிலையத்திலும் பா.ம.க.வினர் ரெயில் மறியல் போராட்டம் நடத்தினர். குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டம் நடத்தியபோது, நகர இளைஞரணி துணைச் செயலாளர் ரஞ்சித் மற்றும் ஒருவர் என்ஜின் மீது ஏறி முழக்கங்கள் எழுப்பினர். அப்போது ரஞ்சித் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டடார்.
என்ஜின் கூரையில் நடந்து சென்ற போது ரஞ்சித்தின் கை உயர்அழுத்த மின்கம்பியில் பட்டதால் மின்சாரம் தாக்கி குபீரென தீப்பிடித்தது. அதே வேகத்தில் நடைமேடையில் தூக்கி வீசப்பட்ட அவரை உடனடியாக பாண்டிச்சேரி ஜிம்பர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் போராட்டக்காரர்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.