திருநெல்வேலி சுற்றுலா


கிருஷ்ணாபுரம் கோயில் சிற்பங்கள்
Hotel image
திருநெல்வேலியில் இருந்து 12 கி.மீ தொலைவில் திருநெல்வேலி - திருசெந்தூர் சாலையில் கிருஷ்ணாபுரம் கிராமம் அமைந்துள்ளது.இங்கு வெங்கடாச்சலபதி கோயில் உள்ளது. இந்த கோயிலில் உள்ள சிற்பங்கள் சிற்பக்கலைக்கு சிறந்த எடுத்துகாட்டாக விளங்குகிறது.

இங்குள்ள அரிய சிற்பங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. நாயக்கர் ஆட்சி காலத்தில் கிருஷ்ணப்ப நாயக்கர் விஜயநகர பேரரசில் இருந்து இந்த சிலைகளை வாங்கியதாக கூறப்படுகிறது.
பூலித்தேவன் அரண்மனை
Hotel image
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோயில் தாலுகாவில் உள்ள ஆவுடையாபுரத்தில் பூலித்தேவன் அரண்மனை அமைந்துள்ளது. இந்த இடம் நெல்கட்டும்செவ்வல் என்றும் அழைக்கப்படுகிறது.

சுதந்திரப்போராட்ட வீரரான பூலித்தேவன் இந்த அரண்மனையை தலைமையகமாக கொண்டு ஆங்கிலேயர்களை எதிர்த்தான்.பாளையக்காரர்கள் வரலாற்றில் பூலித்தேவனுக்கு முக்கிய இடம் உண்டு.

ஆங்கிலேயர்களுக்கு சாமரம் வீசிய நவாப்களை எதிர்க்க பாளையக்காரர்களை ஒன்றிணைத்த பெருமை பூலித்தேவனுக்கு உண்டு. இவரது வெற்றிக்கு அடையாளமாக நவாப் தங்க வாளை பரிசளித்துள்ளார். ஆங்கிலேயர்களை முதன் முதலாக எதிர்த்த தென்னிந்திய மன்னர் என்ற பெருமை இவரையே சாரும். இவரது அரண்மனையை தமிழக அரசு நினைவு சின்னமாக பராமரித்து வருகிறது.
சங்கரநாராயணன் கோயில்
Hotel image
திருநெல்வேலியில் இருந்து 54 கி.மீ தொலைவில் சங்கரன் கோவிலில் இந்த கோயில் உள்ளது.

அரி பெரிதா அரன் பெரிதா என்ற சர்ச்சை எழுந்த போது உமா தேவி குழப்பமுற்றாள். ஒருபக்கம் அண்ணன்,இன்னொரு பக்கம் கணவன் யார் பெரியவர் என்று அறியும் பொருட்டு சிவபெருமானை நோக்கி ஒற்றை காலில் தவம் இருந்தாள்.இறைவனும் அம்பாளின் சந்தேகம் நீக்க அரியும் நானே அரனும் நானே என்று காட்சி தந்தார்.

ஆடித்தபசு திருநாளில் இறைவன் மாலையில் சங்கர நாரயணனாகவும், இரவில் சங்கரலிங்கமாகவும் காட்சி தருகிறார்.மிகவும் சிறப்பு வாய்ந்த இத்திருவிழாவில் 5 லட்சம் பக்தர்கள் கூடுவது தனி சிறப்பு.கோமதியம்மன் தலத்தில் தரப்படும் புற்றுமண்ணை நாள்தோறும் பூசி அணிபவருக்கு குன்ம நோய், வயிற்றுவலி முதலியனவும் தீராத பிறவிப்பிணிநோய்களும் தீர்கின்றன என்பது இத்தலத்து பக்தர்கள் கண்கூடாக கண்ட உண்மை.

இத்தலம் மகாகவி பாரதியாரால் பாடப் பெற்றதலம் என்பது குறிப்பிடத்தக்கது.பாரதியார் தோத்திரப்பாடல்கள் பகுதியில் கோமதியின் மகிமை என்ற தலைப்பில் இத்தலத்தின் பெருமைகளை பாடியுள்ளார்.
மாஞ்சோலை மலை பகுதி
Hotel image
திருநெல்வேலியில் இருந்து 57 கி.மீ தொலைவில் 1162 மீ உயரத்தில் மாஞ்சோலை அமைந்துள்ளது. இங்கு தேயிலை பயிரிடப்பட்டு வருகிறது. இங்குள்ள பாம்டே பர்மா தேயிலை தோட்டம் பிரசித்தி பெற்றதாகும்.

ஏறக்குறைய 4 ஆயிரம் பேர் இங்கு வேலை பார்க்கின்றனர். ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்களை போல இங்கும் நல்ல காலநிலை நிலவுகிறது.

மணிமுத்தாறில் இருந்து மாஞ்சோலை செல்லும் வழியில் உள்ள தாசன் குளம் மிக அழகான இடமாகும்.
பொட்டல்புதூர் தர்கா
Hotel image
1674ம் ஆண்டில் கட்டப்பட்ட மிக பழமையான இந்த தர்காவிற்கு முஸ்லிம் மக்கள் மட்டுமல்லாது, இந்து, கிறிஸ்தவர்களும் வருகிறார்கள். சந்தன கூடு திருவிழாவின் போது சந்தனம், இந்து மக்கள் நிறைந்த கிராமமான ரவணசமுத்திரத்தில் இருந்து அரைத்து கொண்டுவரப்படுகிறது. இந்த தர்கா மத ஒற்றுமைக்கு ஒரு சிறந்த பாலமாக உள்ளது. நாகூர் தர்காவிற்கு இணையாக இந்த தர்கா பிரசித்தி பெற்றதாகும்.
புனித டிரினிட்டி கதீட்ரல் சர்ச் (ஊசி கோபுரம்)
Hotel image
புனித டிரினிட்டி கதீட்ரல் சர்ச் 1826ம் ஆண்டு ரெவரென்ஸ் ரேனியஸ் என்பவரால் கட்டப்பட்டது. 1826ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. 175 நாட்களில் 2 ஆயிரம் ரூபாயில் கட்டி முடிக்கப்பட்டது.

64 அடி நீளம், 30 அடி அகலத்தில் கட்டப்பட்ட இந்த சர்ச் பின்னாளில் விரிவுபடுத்தப்பட்டது. பல்வேறு மதத்தை சார்ந்த மக்களும் இதற்காக நன்கொடை அளித்தனர். 1845ம் ஆண்டு 158 அடி உயரத்தில் கோபுரம் கட்டப்பட்டது. இந்த கோபுரம் ஊசி கோபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.
குற்றாலம் :
Hotel image
நெல்லை மாவட்டத்தின் மிக முக்கியமான சுற்றுலா தலமாக குற்றாலம் விளங்குகிறது. இங்குள்ள நீர்வீழ்ச்சியில் நீராட தமிழகம் மட்டுமல்லாமல் பிறமாநில மக்களும் சீசன் நேரத்தில் குவிகின்றனர். குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி, செண்பக அருவி, புலி அருவி, பழைய குற்றாலம் அருவி, பழத்தோட்ட அருவி, தேனருவி, சிற்றருவி, புது அருவி போன்ற 9 அருவிகள் உள்ளன. 
இவற்றில் நீராடுவது உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்வு தருகிறது. இந்த நீரில் மூலிகைகளின் குணம் இருப்பதால் மன நோய்க்கு மருந்தாக அமைவதாக கூறுவதுண்டு. ஆகஸ்ட் மாதம் அருவிகளில் நீர் வரத்து அதிகம் இருக்கும். தாமிர சபையும் இங்குதான் உள்ளது. மங்குஸ்தான், ராம்தான் போன்ற மலைகளில் இருந்து கிடைக்கும் பழங்கள் சீசன் நேரத்தில் கிடைக்கும்.
நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயில்
Hotel image
இந்த கோயில் நகரின் மையத்தில் அமைந்துள்ளது. ரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில் கோயில் உள்ளது. இங்குள்ள தெப்பகுளம், இசைத்தூண்கள், ஆயிரங்கால் மண்டபம் மற்றும் அரிய நகைகள் ஆகியவை பார்க்ககூடியனவாகும். 

இந்த கோயிலில் 2 கோபுரங்கள் உள்ளன. இந்த கோபுரங்கள் ஆகமவிதிப்படி ராமபாண்டியன் என்ற மன்னனால் கட்டப்பட்டது. 7ம் நூற்றாண்டில் நின்றசீர் நெடுமாறன் என்ற மன்னனின் ஆட்சியின் போது கோயிலின் முக்கிய பகுதிகள் மறு சீரமைக்கப் பட்டது. 1756ம் ஆண்டில் நுழைவாயில் அருகில் அழகான நந்தவனம் அமைக்கப்பட்டது. நூறு துண்களுடன் கூடிய மண்டபம் நந்தவனத்தின் நடுவில் உள்ளது. நெல்லையப்பர் கோயில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை விட பெரியதாகும்.
முண்டந்துறை வனவிலங்கு சரணாலயம்
Hotel image
முண்டந்துறை களக்காடு வனவிலங்கு சரணாலயம் 1988ம் ஆண்டு புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இந்த சரணாலயம் 817 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. நெல்லையில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள அம்பாசமுத்திரம் அருகே இந்த சரணாலயம் அமைந்துள்ளது. 
மாவட்ட அறிவியல் மையம்
Hotel image
நெல்லையில் மாவட்ட அறிவியல் மையம் உள்ளது. பெங்களூர் விஸ்வேஸ்வரையா இண்டஸ்ட்ரீயல் மற்றும் டெக்னாலஜி மியூசியத்தின் ஒரு பகுதி இங்கு இயங்குகிறது. இந்த அறிவியல் மையம் அறிவியல் கல்வியை பொழுதுபோக்கு அம்சத்துடன் வழங்குகிறது. கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் தாமிரபரணி ஆற்றின் அருகில் அறிவியல் மையம் சார்பில் பசுமையான அறிவியல் பார்க் அமைக்கப்பட்டுள்ளது. 

சிறிய கோளரங்கம், டெலஸ்கோப் ஆகியவை இங்கு உள்ளன. மேலும் இங்கு கண்காட்சி, அறிவியல் நிகழ்ச்சிகள், வழிகாட்டி நிகழ்ச்சிகள் ஆகியவை நடத்தப்படுகின்றன.
கூத்தன்குளம் பறவைகள் சரணாலயம்
Hotel image
நெல்லைமாவட்டம் நாங்குநேரிஅருகே உள்ள சிறிய கிராமம் கூத்தன்குளம். ஆண்டு தோறும் டிசம்பர் மாத இறுதியில் வெளிநாடுகளில் இருந்து இடம் பெயர்ந்து வரும் பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொரித்த பின் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் திரும்பி செல்கின்றன. இந்த பறவைகள் சரணாலயம் விரைவில் பிரபலமான நீர்வாழ் பறவைகளுக்கான சரணாலயங்கள் வரிசையில் சேர்க்கப்பட உள்ளது. 

சுமார் 35 வகையான பறவைகள் இங்கு வந்து செல்கின்றன. பறவைகளின் இனப் பெருக்கத்திற்கு இந்த கிராமம் மிகவும் அமைதியானதாகவும், நல்ல சீதோஷண நிலையும் இருப்பதால் பறவைகள் இங்கு வருகின்றன.

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை